செய்திகள்
சீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்

சீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்

Published On 2019-12-10 03:44 GMT   |   Update On 2019-12-10 03:44 GMT
சீனாவில் கர்ப்பிணி மனைவி மிகவும் சோர்வாக இருப்பதை கவனித்த கணவர், உடனே தரையில் அமர்ந்து தன் முதுகில் மனைவியை அமர வைத்த நிகழ்வு இணையதளத்தில் வெளியாகி 70 லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்’குகளை குவித்தது.
பீஜிங் :

சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கேஹாங் நகரை சேர்ந்த ஒருவர், தன் கர்ப்பிணி மனைவியை பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவரை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்ததால் நாற்காலிகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்டன. இதனால் கணவன், மனைவி இருவரும் மருத்துவரின் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.

நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்ததால் அந்த பெண்ணுக்கு கால் வலிக்க தொடங்கியது. எனினும் கர்ப்பிணி பெண்ணுக்கு எழுந்து இடம்தர யாரும் முன்வரவில்லை.



தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதை கவனித்த அவரது கணவர், உடனே தரையில் அமர்ந்து தன் முதுகில் மனைவியை அமர வைத்து கொண்டார்.

இதை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை கேஹாங் நகர போலீசார், “இவர் ஒரு சிறந்த கணவர், இவரை அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்ற தலைப்புடன் இணையதளத்தில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ குறுகிய நேரத்தில் 70 லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்’குகளை குவித்தது. மேலும், கர்ப்பிணியின் கணவரை பலரும் பாராட்டி வரும் நிலையில், அந்த பெண்ணுக்காக எழுந்து இடம் தராதவர்களை சிலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.
Tags:    

Similar News