செய்திகள்
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 25 தலிபான்கள் பலி

Published On 2019-12-09 11:39 GMT   |   Update On 2019-12-09 11:39 GMT
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். 

மேலும், பயங்கரவாதிகள் ராணுவம் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல், குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். 

இவர்களை அழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு அரசுப்படைகளும் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் அரசுப் படைகளுக்கும் தலிபான் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டின் வார்டக் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 



இதையடுத்து, அப்பகுதியில் சிறப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இதற்கிடையில், அந்நாட்டின் நட் அலி மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்த ஒரு தலிபான் பயங்கரவாதி வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச்செய்தான். 

இந்த சம்பவத்தில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 
Tags:    

Similar News