செய்திகள்
பாரதியார் வரிகள்

2,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தமிழர் குலம் - சிங்கப்பூரில் புத்தகம் வெளியீடு

Published On 2019-12-09 09:50 GMT   |   Update On 2019-12-09 09:50 GMT
சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சமூகம் இருப்பதாக தமிழர் பாரம்பரியத்தின் அதிகம் அறியப்படாத அம்சங்களை ஆராயும் புதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்:

உலகம் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன. புற்களும் பூச்சியினங்களும் மட்டுமே முதலில் கிரகத்தில் இருந்தன. பரிணாம வளர்ச்சி அடைய அடைய குரங்கிலிருந்தே மனிதன் வந்தான் என அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால், கடவுள் மனிதரை படைத்தார், படைத்தவன் ஒருவன் உள்ளான் என்கின்றனர் மற்றொரு சார்பினர். 

மனித குலம் எங்கே, எவ்வாறு தோன்றியது? எவ்வாறு நாகரீகம் வளர்ந்தது? என்ற கேள்விகள் பலரிடமும் உள்ளன. உலகில் பழமையானது கிரேக்க நாகரீகம், எகிப்திய நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்ற தகவல்கள் நாம் அறிந்ததே. இவை அனைத்தும் கி.மு (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) காலகட்டங்களில் தோன்றியவை என அறிவியலாளர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் கண்டறிந்துள்ளனர்.

அதேபோல், அந்த காலகட்டத்தில் அதாவது 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தழைத்தோங்கியது நம் தமிழர் நாகரீகம் என்கின்றனர் சில ஆராச்சியாளர்கள். குமரிக் கண்டம் என்ற கண்டம் இருந்ததாகவும் நில அதிர்வுகள், கண்ட நகர்வுகள் போன்ற புவியியல் காரணங்கள் காரணமாக அக்கண்டம் அழிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சாதிகளும், மதங்களும் இல்லாமல் தமிழர் என்ற மரபு மட்டுமே செழித்தோங்கி இருந்ததை சமீபத்திய கீழடி அகழாய்வு நமக்கு உணர்த்தியதை மறந்திருக்க மாட்டோம்.  

இந்நிலையில், சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு நாடுகளில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சமூகம் வாழ்ந்து வருகிறது என சிங்கப்பூர் மந்திரி வெளியிட்டுள்ள தமிழர் மரபு குறித்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் உள்ள இந்திய பாரம்பரிய நிலையத்தில் ‘தற்காலிகம் முதல் நிரந்தர குடியேறிகள் வரை - சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய தமிழர்கள்’ என்ற தலைப்பிலான புத்தகத்தை சிங்கப்பூர் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு மந்திரி ஈஸ்வரன் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார்.



இது தென்கிழக்கு ஆசியா மற்றும் சிங்கப்பூரில் தமிழ் வரலாறு மற்றும் தமிழர் பாரம்பரியம் குறித்து குறைவாக அறியப்பட்ட அம்சங்களை பற்றியும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியுடன் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை பற்றியும் விளக்குகிறது.

சிங்கப்பூரின் முக்கிய பாரம்பரிய பொருளான சிங்கப்பூர் கல்லில் உள்ள கல்வெட்டுகள் 10 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று சில வல்லுநர்கள் கூறியுள்ளதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் கல்லின் சில பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகளில் "கேசரிவா" என்ற சொற்றொடர் அடையாளம் காணப்பட்டது.
இது "பராகேசரிவர்மன்" என்ற வார்த்தையின் ஒரு பகுதியாக இருக்கலாம் - இது சோழ வம்சத்தின் பல மன்னர்கள், தென்னிந்தியாவின் தமிழ் வம்சம் மற்றும் வரலாற்றில் மிக நீண்ட காலமாக ஆட்சி செய்யும் வம்சங்களில் ஒன்றாகும், என புத்தகத்தின் பங்களிப்பாளரான ஆராய்ச்சியாளர் இயன் சின்க்ளேர் தெரிவித்தார்.



‘சிங்கப்பூரில் உள்ள தமிழ் சமூகம் தெளிவாக அடையாளம் காணக்கூடியது, ஆனால் எளிதில் தீர்மானிக்க முடியாதது, அவ்வாறு செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் சொற்பொருள் முதல் அரசியல் வரையிலான சவால்களால் நிறைந்துள்ளது. சிங்கப்பூரின் அடையாளத்தை வடிவமைப்பதில் ஆரம்பகால தமிழ் முன்னோடிகளின் முயற்சிகள் மிக முக்கியமானவை.
 
நம் நாட்டில் இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் சிங்கப்பூரர்கள், ஒரு துடிப்பான மற்றும் மாறுபட்ட சமூகத்தினர். அவர்கள் சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றனர்’, என ஈஸ்வரன் கூறினார்.

Tags:    

Similar News