செய்திகள்
ஈராக்: போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 28 பேர் பலி
ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர்.
பாக்தாத்:
ஈராக் நாட்டில் அரசின் நிர்வாக திறமையின்மை போன்ற காரணங்களால் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகியுள்ளன.
மேலும், ஈராக்கில் அண்டை நாடான ஈரானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், நாட்டில் நேர்மையான தேர்தல் நடத்துதல் போன்ற காரணங்களை முன்வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடத்திவரும் இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், அந்நாட்டின் தெற்கு பகுதியின் நஸிரியா நகரின் நஜிப் என்ற இடத்தில் அமைந்துள்ள ஈரான் நாட்டின் தூதரகத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள் அதை தீயிட்டு கொளுத்தினர். மேலும், அப்பகுதியில் இருந்த வணிக வளாகங்கள், வாகனங்கள் என தங்கள் கண்ணில் பட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.
அப்போது அங்கு வந்த பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் போராட்டக்காரர்கள் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 150-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
ஈராக்கில் அரசுக்கு எதிராக ஒரு மாதத்திற்கு நடந்துவரும் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்ப்வங்களில் பலியானோர் எண்ணிக்கை 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.