செய்திகள்
மாணவியின் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை
அமெரிக்காவில் தேர்வெழுத வந்த கல்லூரி மாணவியின் குழந்தையை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை சமூக வலைத்தளங்களில் பாராட்டை பெற்று வருகிறார்.
நியூயார்க்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது சான் ஜாசின்டோ கல்லூரி. இந்த கல்லூரியில் பயிலும் யேட்ஸ் என்ற மாணவி, படித்துக்கொண்டே வேலைக்கு செல்வதுடன், தனது கைக்குழந்தையையும் கவனித்துக்கொள்கிறார்.
இந்நிலையில், நிகழ்வன்று கல்லூரியில் யேட்ஸிற்கு தேர்வு இருந்துள்ளது. சில நிமிடங்களில் தேர்வு ஆரம்பிக்க இருந்த நிலையில் யேட்ஸ் வேலைக்கு சென்ற கையோடு தனது குழந்தையுடன் வகுப்பிற்கு வந்தார்.
தேர்வுக்கான முக்கிய குறிப்புகளை பேராசிரியை பார்பி ஹிக்ஸ் கற்பித்துக்கொண்டிருந்தார், யேட்ஸ் வந்த உடன் அவரது குழந்தையை தனது இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு அவரை பாடத்தை கவனிக்குமாறு அறிவுறுத்தினார். குழந்தையை அவர் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பலரது பாராட்டையும் பெற்றது.
‘குழந்தையை அவர் வாங்கிக்கொண்டு என்னை பாடத்தை கவனிக்க சொன்னது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. மற்றவர்களுக்கு உதவி தேவைப்படும் போது ஹிக்ஸ் தயங்காமல் செய்வார்’ என யேட்ஸ் தெரிவித்தார்.
இது குறித்து பேராசிரியை பார்பியின் மகள் கூறுகையில், ‘குழந்தையை கவனித்துக்கொண்டு வேலை மற்றும் படிப்புகளை தொடர்வது எவ்வளவு கடினம் என அவருக்கு தெரியும். அவர் அதை வெற்றிகரமாக செய்து முடித்து அவரது கனவை நனவாக்கியுள்ளார். இப்போது மற்றவர்களும் இது போன்ற லட்சியங்களை அடைய உதவி செய்கிறார்’, என தெரிவித்தார்.