செய்திகள்
என் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள் -இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்திருப்பதுடன், இது தனது ஆட்சியை கவிழ்க்க செய்யும் முயற்சி என கூறியுள்ளார்.
டெல் அவிவ்:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தன் நண்பர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பரப் பொருட்களை பரிசாகப் பெற்றதாகவும், நாளிதழ்களில் தனக்கு சாதகமான செய்திகளை பிரசுரிக்க செய்வதற்காக வர்த்தக உதவிகள் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பெஞ்சமின் நேதன்யாகு மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை நேதன்யாகு மறுத்துள்ளார்.
‘என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அரசியல் நோக்கம் கொண்டவை. எனது ஆட்சியை கவிழ்ப்பதுதான் இந்த விசாரணையின் நோக்கம். சட்டத்தின்படி நான் நாட்டை தொடர்ந்து வழிநடத்துவேன். பொய்கள் வெற்றி பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’ என்றார் நேதன்யாகு.