செய்திகள்
ஆஸ்திரியாவில் ஹிட்லர் வீடு

ஆஸ்திரியாவில் ஹிட்லர் வீடு, போலீஸ் நிலையமாக மாறுகிறது

Published On 2019-11-21 00:46 GMT   |   Update On 2019-11-21 00:46 GMT
ஆஸ்திரியாவில் உள்ள ஹிட்லரின் வீடு, போலீஸ் நிலையமாக மாற உள்ளது.
வியன்னா:

இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனியின் நாஜி படைகளுக்கு தலைமை தாங்கி பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த சர்வாதிகாரி ஹிட்லர், ஆஸ்திரியா நாட்டில் பிறந்தவர். ஆஸ்திரியாவின் மேற்கு பகுதியில் ஜெர்மனியின் எல்லையையொட்டி அமைந்துள்ள பிரவ்னவ் ஆம் இன் நகரில் உள்ள ஒரு வீட்டில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி ஹிட்லர் பிறந்தார்.

17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் ஹிட்லர் சில வாரங்களே வாழ்ந்தார். எனினும் அந்த வீடு ஹிட்லர் மற்றும் அவரது கொள்கைகளை நினைவு கூரும் இடமாகவே இருந்து வந்தது. இதனால் ஆஸ்திரியா அரசு அந்த வீட்டை கைப்பற்றி, அழிக்க முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இந்த வீட்டின் உரிமையாளர் அரசுக்கு இணங்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் பல ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடந்து வந்தது. இறுதியில் கடந்த 2016-ம் ஆண்டு கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் அந்த வீட்டை 8 லட்சத்து 10ஆயிரம் யூரோக்களுக்கு அரசு கையகப்படுத்தியது.

அதன் பிறகு, வீட்டை இடித்து தரைமட்டமாக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஹிட்லர் பிறந்த வீட்டை போலீஸ் நிலையமாக மாற்ற ஆஸ்திரியா அரசு தற்போது முடிவு செய்துள்ளது. 
Tags:    

Similar News