செய்திகள்
அலி காமேனி

பொருளாதார போரிலும் எதிரிகளை முறியடிப்போம் - ஈரான் தலைவர் உறுதி

Published On 2019-11-20 08:04 GMT   |   Update On 2019-11-20 08:04 GMT
பாதுகாப்பு தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடிந்த ஈரான், பொருளாதார பிரச்சினைகளையும் சரிசெய்து கொள்ளும் என ஈரானின் முதன்மை தலைவர் கூறியுள்ளார்.
தெஹ்ரான்:

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கி கொள்ளவும் இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால் இது அமெரிக்க நலனுக்கு எதிரானது என கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த ஆண்டு தற்போதைய அதிபர் டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார். இதனால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்தது. அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் அடுத்தடுத்து மீறி வருகிறது. 

சமீபத்தில் அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை 10 மடங்காக அதிகரித்தது. மேலும் ஒரு அணு உலை கட்டும் பணிகளையும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கடவுளின் கிருபையால் ஈரான் மீதான பொருளாதார தடைகளும் முறியடிக்கப்படும் என ஈரான் முதன்மை தலைவர் அலி காமேனி அறிவித்துள்ளார். 

‘அரசியல், பாதுகாப்பு விவகாரங்கள், ராணுவ போர்களிலும் எதிரிகளை முறியடித்துள்ளோம் என நண்பர்களும் எதிரிகளும் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் கிருபையால் பல்வேறு துறைகளில் எதிரிகளை முறியடித்துள்ளோம். பொருளாதாரப் போரிலும் எதிரிகளை முறியடிப்போம்’ என அலி காமேனி கூறியுள்ளார்.

ஈரானில் தற்போது பெட்ரோல் விலை உயர்வு காரணமாக நடைபெறும் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News