செய்திகள்
ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம்ஜாங் அன்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வடகொரியா திட்டவட்டம்

Published On 2019-11-19 19:14 GMT   |   Update On 2019-11-19 19:14 GMT
அமெரிக்கா தனது விரோதப்போக்கை கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.
பியாங்யாங்:

அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது போருக்கான முன்னோட்டம் என கூறி வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் வடகொரியா உடனான அணு ஆயுத பேச்சுவார்த்தையை எளிதாக்கும் வகையில் நல்லெண்ண அடிப்படையில் இந்த மாதம் நடக்கவிருந்த கூட்டு போர் பயிற்சியை தள்ளிவைப்பதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் தெரிவித்தன.

அத்துடன் அணுஆயுத விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரைந்து செயல்பட வேண்டுமெனவும், இது தொடர்பாக விரைவில் சந்தித்து பேசுவோம் எனவும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா தனது விரோதப்போக்கை கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.

இது குறித்து வடகொரியா ஆசிய பசிபிக் அமைதி குழுவின் தலைவர் கிம் யாங் ஜோல் கூறுகையில், ‘‘கூட்டு போர் பயிற்சியை ஒத்திவைப்பது என்பது பொருத்தமற்றதாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டு போர் பயிற்சியை அமெரிக்கா கைவிட வேண்டும் அல்லது ஒருமுறையாவது நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்’’ என கூறினார்.

மேலும் அவர், ‘‘பயிற்சியைத் தற்காலிகமாக நிறுத்துவதால் கொரிய தீபகற்பத்தில் அமைதியும், பாதுகாப்பும் ஏற்படாது. மேலும் இது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயலும் தூதரக நடவடிக்கைகளுக்கு உதவாது. தனது விரோதப்போக்கு கொள்கையை முற்றிலுமாக கைவிடாமல் அணுஆயுத பேச்சுவார்த்தை நடத்திவிடலாம் என அமெரிக்கா கனவு காணகூடாது. வடகொரியா அதற்கு வாய்ப்பு அளிக்காது’’ என்றார். 
Tags:    

Similar News