செய்திகள்
ஆப்கானிஸ்தான் - பிணைகைதிகளாக கடத்தப்பட்ட வெளிநாட்டு பேராசிரியர்கள் 2 பேரை விடுவித்தது தலிபான்
காபுலில் கடந்த 2016-ம் ஆண்டு பிணைக்கைதிகளாக கடத்தப்பட்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த 2 பேராசிரியர்களை தலிபான்கள் இன்று விடுதலை செய்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
இந்த பயங்கரவாத குழுவை ஒழிப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும், ஆப்கானிஸ்தான் அரசு படைகளும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
இதனால் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேவின் கிங்(அமெரிக்கா) மற்றும் டிமோதி வீக்ஸ் (ஆஸ்திரேலியா) இரு வெளிநாடுகளை சேர்ந்த பேராசிரியர்களை ராணுவ உடையில் வந்த தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றனர்.
பின்னர் கடத்தப்பட்ட இருவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியானது. கடத்தப்பட்டவர்களை மீட்க ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியை தழுவியது.
இதற்கிடையில், தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழக பேராசியர்கள் இருவரை விடுவித்தால் அரசு சிறையில் உள்ள 3 பயங்கரவாதிகளை விடுவிப்பதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி சமீபத்தில் தெரிவித்துள்ளார்
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபரின் கைதி மாற்று ஒப்பந்தத்தை ஏற்று 2016-ம் ஆண்டு தங்களால் கடத்தப்பட்டு பிணை கைதிகளாக இருந்த அமெரிக்க பல்கலைகழக பேராசிரியர்கள் இருவரையும் சாபுல் மாகாணத்திற்கு உள்பட்ட நவ்பஹர் மாவட்டத்தில் வைத்தது தலிபான்கள் இன்று விடுதலை செய்தனர்.
தலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட இரண்டு பேராசிரியர்களையும் அமெரிக்க படையினர் தங்கள் ராணுவ ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்றனர்.
அமெரிக்க பல்கலைகழக பேராசிரியர்கள் இருவரும் விடுதலை தலிபான்களால் விடுதலை செய்யப்பட்டதையடுத்து 3 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் அரசால் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.