செய்திகள்
சஜித் பிரேமதாசா

இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா

Published On 2019-11-17 05:49 GMT   |   Update On 2019-11-17 08:35 GMT
இலங்கை அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, சஜித் பிரேமதாசா தனது கட்சியின் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
கொழும்பு:

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று நள்ளிரவு முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து இரு கட்சி வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

இன்று அதிகாலை நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால், காலை 7 மணி நிலவரப்படி, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கோத்தபய ராஜபக்சேவை விட கூடுதலாக ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார்.

தொடர்ந்து, காலை 10 மணி நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை பெற்றார். அதிபராக தேவையான 50 சதவீதம் வாக்குகளை கோத்தபய ராஜபக்சே பெற்றார்.

அதைத்தொடர்ந்து, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகிறேன். மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, சஜித் பிரேமதாசா தனது கட்சியின் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
Tags:    

Similar News