செய்திகள்
ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினரிடம் குடும்பத்துடன் சரணடைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள்
ஆப்கானிஸ்தானில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் குடும்பத்தினர் 111 பேருடன் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ். அமைப்பு என பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டுவருகிறது. அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ள இந்த பயங்கரவாத குழுக்கள் போட்டி அரசாங்கம் நடத்திவருகின்றனர்.
தங்கள் ஆளுமையை ஏற்க மறுக்கும் மக்களை கொடூரமாக கொன்று குவித்துவரும் பயங்கரவாதிகள் பல்வேறு தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
இதனால் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதற்கிடையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருந்த நங்கர்ஹர் மாகாணத்தில் கடந்த ஒருமாதத்திற்கு மேலாக பாதுகாப்பு படையினர் திவீர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அமைப்பு ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் தற்போது அந்த அமைப்பின் சிறு குழுக்கள் மட்டுமே செயல்பட்டுவருகிறது.
அந்த குழுக்களை ஒழிக்கவும் தேடுதல்வேட்டை நடைபெற்றுவருவதாக அந்நாட்டு உள்துறை மந்திரி மசூத் கடந்த 10-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், அரசுப் படையினரின் தாக்குதலுக்கு அஞ்சி நங்கர்ஹர் மாகாணத்தின் அச்சின் மாவட்டத்தை சேர்ந்த 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று தங்கள் குடும்பத்தினர் 111 பேருடன் ( 46 பெண்கள், 65 குழந்தைகள்) இணைந்து பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். மேலும், தங்களிடம் இருந்த ஆயுதங்களையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.