செய்திகள்
விவசாயத்துறை மந்திரி இஸ்மாயில் ராகு

வெட்டுக்கிளிகளை ஒழிக்க வினோத யோசனை - கிண்டலுக்கு ஆளான பாகிஸ்தான் மந்திரி

Published On 2019-11-12 18:35 GMT   |   Update On 2019-11-12 18:35 GMT
வெட்டுக்கிளிகள் பிரச்சினைக்கு சிந்து மாகாணத்தின் விவசாயத்துறை மந்திரி இஸ்மாயில் ராகு கூறிய தீர்வு சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடற்கரையோரம் அதிக அளவில் காணப்படும் வெட்டுக்கிளிகள் தற்போது சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இந்த வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். மேலும் இந்த வெட்டுக்கிளிகள் சாலைகள், வீடுகள் என எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக படையெடுப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் வெட்டுக்கிளிகள் பிரச்சினைக்கு சிந்து மாகாணத்தின் விவசாயத்துறை மந்திரி இஸ்மாயில் ராகு கூறிய தீர்வு சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.

வெட்டுக்கிளிகள் பிரச்சினை குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய இஸ்மாயில் ராகு, ‘‘பொது மக்கள் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெட்டுக்கிளிகளை பிடித்து, சமைத்து பிரியாணி மற்றும் பிற உணவுகளை தயார் செய்து சாப்பிடுங்கள். மக்களுக்கு உணவாக மாறுவதற்காக தான் இந்த பூச்சிகள் இங்கே வந்துள்ளன’’ என கூறினார்.

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல் பிரியாணி போட்டு சாப்பிட சொல்லும் மந்திரியை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News