செய்திகள்
பொலிவியா போலீசார் (பழைய படம்)

பொலிவியா: அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த போலீசார்

Published On 2019-11-09 07:40 GMT   |   Update On 2019-11-09 07:40 GMT
பொலிவியாவில் அதிபருக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தில் மக்களோடு காவல்துறையினரும் இணைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூக்ரே:

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த மாதம் 20ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபர் இவோ மோரல்ஸ் (சோசலிச இயக்கம்), முன்னாள் அதிபரும் புரட்சிகர இடது முன்னிணி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் மொத்தம் 88.31 சதவீத வாக்குகள் பதிவானது. 

அதிபர் இவோ மோரல்ஸ் 47.07 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட அக்டோபர் 25ம்தேதிக்கு முன்தினமே தான் வெற்றி பெற்றதாக இவா மோரல்ஸ் அறிவித்திருந்தார். இந்த முடிவை கார்லஸ் மெசா ஏற்கவில்லை.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். வாக்கு எண்ணும் நடைமுறைகளை விமர்சித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து அதிபர் இவா மோரல்ஸ் அவசர கூட்டத்தை நடத்த வேண்டி, மீண்டும் நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அவசர கூட்டத்தை நடத்த வேண்டி போராட்டக்காரர்களுடன் காவல்துறையினரும் வீதியில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். தலைநகர் சூக்ரேயின் சாண்டா குரூஸ் டி லே நகரில் போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேரணியாக சென்றதை உள்ளூர் பத்திரிக்கையான எல் டெபெர் வெளியிட்டுள்ளது.

தொடர் போராட்டங்கள் காரணமாக பொலிவியா நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.
Tags:    

Similar News