செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு

Published On 2019-11-07 21:50 GMT   |   Update On 2019-11-07 21:50 GMT
கர்தார்பூருக்கு வர சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் வேண்டாம் என கூறிய இம்ரான்கான் முடிவுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

  • சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார்.
  • இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த கர்தார்பூர் சாகிப் குருத்வாரா உள்ளது.
  • குருநானக்கின் 550-வது பிறந்தநாளையொட்டி நாளை (சனிக்கிழமை) பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானும், இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த வழித்தடத்தை தொடங்கி வைக்கின்றனர்.


கர்தார்பூருக்கு வர இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, அடையாள அட்டை போதுமானது என கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த நாட்டின் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பிலும், இறையாண்மையிலும் சமரசம் இல்லை என ராணுவம் திட்டவட்டமாக கூறி உள்ளது.

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது கடமையாக உள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த கர்தார்பூர் சாகிப் குருத்வாரா உள்ளது. இந்த குருத்வாராவுக்கு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சீக்கியர்கள் சென்று வழிபாடு நடத்தி வர ஏதுவாக வழித்தடம் அமைக்க வேண்டும் என்று இந்தியா கோரி இப்போது அது செயல்வடிவத்துக்கு வந்துள்ளது.இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் தேராபாபா நானக்கையும், பாகிஸ்தானின் கர்தார்பூர் சாகிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. குர்தார்பூருக்கு விசா இன்றி சீக்கியர்கள் சென்று வர இந்த திட்டம் வழிவகுக்கிறது. இந்த வழித்தடத்தை குருநானக்கின் 550-வது பிறந்தநாளையொட்டி நாளை (சனிக்கிழமை) பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானும், இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியும் தொடங்கி வைக்கின்றனர். இது சீக்கியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. கர்தார்பூருக்கு செல்வதற்கு இந்தியர்கள் கட்டணமாக 20 டாலர் (சுமார் ரூ.1,400) செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கர்தார்பூர் பயணம் மேற்கொள்ளும் சீக்கியர்களுக்கு அதிரடியாக பல்வேறு சலுகைகளை அறிவித்தார். கர்தார்பூருக்கு சீக்கியர்கள் வர பாஸ்போர்ட் தேவையில்லை. செல்லத்தக்க அடையாள அட்டை இருந்தால் போதுமானது, வழித்தடம் தொடங்குகிற நாளில் கட்டணத்தில் இருந்து விலக்கு தரப்படும் என தெரிவித்தார். கர்தார்பூருக்கு செல்கிற முதல் இந்திய குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பஞ்சாப் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங், மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்திப்சிங் பூரி ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

குர்தார்பூருக்கு சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் தேவையில்லை என்ற இம்ரான்கான் அறிவிப்பை தொடர்ந்து, இதை உறுதி செய்ய இந்தியா விரும்பியது. இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, இம்ரான்கான் முடிவுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில், ‘‘ நாங்கள் பாதுகாப்பு இணைப்பை கொண்டுள்ளோம். கர்தார்பூருக்கு சீக்கியர்கள் வருவது சட்டபூர்வமாக இருக்க வேண்டும். பாதுகாப்பில் அல்லது இறையாண்மையில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்’’ என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார். 
Tags:    

Similar News