செய்திகள்
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்
லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று வீடு திரும்பினார்.
இஸ்லாமாபாத்:
மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். பனாமா கேட் ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், லாகூர் மருத்துவமனை டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்குப் பின்னர், தற்போது நவாஸ் ஷெரீப் வீடு திரும்பியுள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக நவாஸ் ஷெரிப் கட்சியின் செய்தி தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப் கூறுகையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நவாஸ் ஷெரீப் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது. நவாஸ் ஷெரீப்பை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.