செய்திகள்
வெள்ளை மாளிகை, வாஷிங்டன்

பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து விலகல் - அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அமெரிக்கா

Published On 2019-11-05 10:13 GMT   |   Update On 2019-11-05 10:13 GMT
பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து விலகுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அமெரிக்க அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளது.
  • பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை 4-11-2016 முதல் அமலுக்கு வந்தது.
  • 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நாடுகள், இதை முறைப்படி ஏற்றன.
வாஷிங்டன்:

உலக வெப்பமயமாதல் என்ற பிரச்சினை பயங்கரவாதம் போன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினை ஆகும். இதை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள போர்கேட் நகரில் 30-11-2015 முதல் 12-12-2015 வரை உச்சி மாநாடு நடைபெற்றது.

இதைதொடர்ந்து, புவி வெப்ப மயமாதலுக்கு அடிப்படை காரணமான  'கிரீன் ஹவுஸ் கியாஸ்' என்னும் பசுமை குடில் வாயுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், நியூயார்க் நகரில் சர்வதேச மாநாடு நடந்தது.



இதில் ’பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை’ என்ற பெயரில் ஒரு உடன்படிக்கை உருவானது. இதில், உலகளவில் 56 சதவீதத்துக்கும் அதிகமான பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்துக்கு காரணமான 72 நாடுகள் உள்பட பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டன.
 
கையெழுத்திட்ட நாடுகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நாடுகள், இதை முறைப்படி ஏற்று இதுதொடர்பான ஆவணங்களை ஐ.நா. சபையிடம் அளித்தன. இதன்காரணமாக பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை 4-11-2016 முதல் அமலுக்கு வந்தது.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகப்போவதாக தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டில் அறிவித்தார். இதனால், நியாயமற்ற முறையில் அமெரிக்காவுக்கு பெருமளவிலான பொருளாதார சுமை ஏற்படுவதால் இனியும் இதில் நீடிக்க முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அமெரிக்க அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளது.

இந்த முடிவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இந்த விலகல் ஓராண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News