செய்திகள்
டிரம்ப் மீது பெண் கட்டுரையாளர் அவதூறு வழக்கு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் கட்டுரையாளர் தற்போது அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்காவை சேர்ந்தவர் இ ஜீன் காரல் (வயது 75). பிரபல பெண் கட்டுரையாளரும், 'டிவி' வர்ணனையாளருமான இவர், 1990ம் ஆண்டு டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என கடந்த ஜூன் மாதம் நியூயார்க் மேகசினில் எழுதிய கட்டுரையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பெண்ணை நான் பார்த்தது கூட கிடையாது, அவர் கூறுவது முற்றிலும் பொய் என டிரம்ப் கூறினார்.
இந்நிலையில், டிரம்ப் மீது ஜீன் காரல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். 1987 ம் ஆண்டு நான் எனது கணவர், டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சேர்ந்து எடுத்த புகைப்படம் உள்ளது. ஆனால் என்னை பார்த்ததே இல்லை என டிரம்ப் கூறி தனது நற்பெயருக்கும், தொழிலுக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளார், என ஜீன் காரல் குற்றம் சாட்டியுள்ளார்.
2016ல் அதிபர் தேர்தலின்போது டிரம்ப் மீது 12-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். அவற்றிற்கு எந்த ஆதாரங்களும் இல்லை; தன்னை இழிவுபடுத்தவே புகார்கள் கூறப்படுகின்றன எனக் கூறிய டிரம்ப், தேர்தலில் வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.