செய்திகள்
மாதிரிப்படம்

அமெரிக்காவின் மூளையாக செயல்பட்டவரே பாக்தாதி தான் - ரஷியா

Published On 2019-11-02 07:18 GMT   |   Update On 2019-11-02 07:18 GMT
அமெரிக்காவின் மூளையாக செயல்பட்டவரே ஐ.எஸ் பயங்கரவாத தலைவர் பாக்தாதி தான் என ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ:

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பாக்தாதி சமீபத்தில் கொல்லப்பட்டார். இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அறிவித்தார். பாக்தாதி கொல்லப்பட்ட தாக்குதல் வீடியோவையும் அமெரிக்கா வெளியிட்டது. ஐ.எஸ் அமைப்பும் இந்த தகவலை உறுதி செய்தது.

இதையடுத்து அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

பாக்தாதி கொல்லப்பட்டதை கொண்டாட வேண்டாம், இதற்கு தகுந்த பதிலடி அளிப்போம் என ஐ.எஸ் அமைப்பு அமெரிக்காவிற்கு நேற்று எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் மூளையாக செயல்பட்டவரே ஐ.எஸ் தலைவர் பாக்தாதிதான் என ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ராவ் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், “ஐ.எஸ் தலைவர் பாக்தாதி பற்றிய தகவல்கள் போதுமானதாக இல்லை. அவர் கொல்லப்பட்டது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. எங்களது ராணுவம் இது குறித்து உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருகிறது. அவர்களும் அமெரிக்கா வெளியிட்ட தகவல்களை இதுவரை உறுதிபடுத்தவில்லை. 

ஈராக்கில் சட்டவிரோத படையெடுப்பு, ஈராக் அரசின் சரிவு மற்றும் அமெரிக்கர்களால் சிறைகளில் இருந்து பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் ஐ.எஸ். அமைப்பு தலைதூக்கியது. எது எப்படியோ அவர்கள் உருவாக்கியதை அவர்களே அழித்துவிட்டார்கள்” என கூறினார்.

ஐ.எஸ். அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டது ஒன்றும் மிகப்பெரிய விஷயம் இல்லை. நீங்கள் உருவாக்கியதை நீங்களே அழித்து இருக்கிறீர்கள் என ஈரான் நாட்டின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி முகமது ஜாவத் அசாரி கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News