செய்திகள்
மாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 53 ராணுவ வீரர்கள் பலி
மாலி நாட்டில் ராணுவ சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பமாகோ:
ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள மாலி நாடு, சமீப காலமாக பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் ராணுவத்தினரும் போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எல்லைப்பகுதியில் உள்ள மெனாகா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இது குறித்து நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் யயா சங்கரே, டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் கண்டனத்திற்கு உரியது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த கொடூர தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த மாதம் இதே போன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாலி நாட்டில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.