செய்திகள்
பூனை

அமெரிக்காவில் தீ விபத்தில் இருந்து எஜமானியை காப்பாற்றிய பூனை

Published On 2019-11-01 08:51 GMT   |   Update On 2019-11-01 08:51 GMT
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தனது பூனை காப்பாற்றியதாக, பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ளது லான்சிங் நகரம். இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒன்பது குடியிருப்புகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இருவர் உயிரிழந்தனர் என உள்ளூர் பத்திரிக்கைகள் தெரிவித்தன.

இந்நிலையில், தீ விபத்தில் இருந்து வளர்ப்புப் பிராணியான பூனை தன்னை காப்பாற்றியதாக அந்த குடியிருப்பைச் சேர்ந்த டேனியலி ஸ்காபெர் என்ற பெண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நள்ளிரவு ஒரு மணியளவில் குடியுருப்புப் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எனக்கு குடியுருப்புகள் தீப்பற்றிக்கொண்டது தெரியவில்லை. வளர்ப்புப் பிராணியான எனது பூனை என்மீது குதித்தது. 

முதலில் நான் அதற்கான காரணத்தை அறியவில்லை. பின்பு பூனை கத்திக்கொண்டெ இருந்ததால் விழித்தெழுந்தேன். தீ மளமளவென பரவியது. வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் பூனையை காணவில்லை. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மறுநாள் காலை தீ முழுவதும் அணைக்கப்பட்டபின் பூனையை கண்டறிந்தேன். இதையடுத்து கார்னெல் விலங்குகள் மருத்துவமனையில் பூனைக்கு கருவிழி மற்றும் மூச்சுக்குழாய் சோதனை போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

5 வருடங்களுக்கு முன்பு தெருவில் இருந்து இந்த பூனையை எடுத்தேன். அது இன்று என் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள உதவியுள்ளது” என நெகிழ்ச்சியோடு கூறினார். 
Tags:    

Similar News