செய்திகள்
உலகிலேயே வயதான பெண் தான்சிலியா பிசம்பேயவா

123-வது பிறந்த நாளை கொண்டாடியவர் - உலகிலேயே வயதான பெண் மரணம்

Published On 2019-10-31 22:48 GMT   |   Update On 2019-10-31 22:48 GMT
உலகிலேயே வயதான பெண் என்ற புகழுக்கு சொந்தக்காரரான தான்சிலியா பிசம்பேயவா காலமானார்.
மாஸ்கோ:

ரஷியாவின் அஸ்ட்ராஜன் பிராந்தியத்தில் உள்ள இஸ்லமாசி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தான்சிலியா பிசம்பேயவா. 123 வயதான இவர், உலகிலேயே வயதான பெண் என்ற புகழுக்கு சொந்தக்காரர். 1896-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி பிறந்த இவர், கடந்த மார்ச் மாதம் தனது 123-வது பிறந்தநாளை கொண்டாடினார். 4 குழந்தைகளின் தாயான அவர், தனது இளைய மகனுடன் வசித்து வந்தார். பிசம்பேயவாவுக்கு 10 பேரக்குழந்தைகள், 15 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். 3 நூற்றாண்டுகளை கண்ட அவர் இறந்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.

பிசம்பேயவாவின் சாதனையை முறியடித்து வாழ்ந்த பெண்ணும் ரஷியாவை சேர்ந்தவரே. அங்குள்ள கபார்டினோ பால்கரியாவை சேர்ந்த 127 வயதான நானு ஷாவோவா, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News