செய்திகள்
பிலிப்பைன்ஸ் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானாவ் தீவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானாவ் தீவை மையமாக கொண்டு கடந்த 29-ந்தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் சேதமடைந்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, மிண்டானாவ் தீவில் இன்று காலை மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.5 ரிக்டர் அளவில் பதிவானது. 45 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு தாக்கியது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
பள்ளியில் இருந்து மாணவர்கள், மால், அலுவலக கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேறினர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
இந்நிலையில், பிலிப்பைன்சில் மீட்புப் படையினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களில் மிண்டானாவை மையமாக கொண்டு 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.