செய்திகள்
உக்ரைனில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.
கீவ்:
கிழக்கு ஐரோப்பியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன். அந்நாட்டின் தலைநகர் கீவ்வில் உள்ள புஷ்கின்ஸ்கா பகுதியில் நேற்று நள்ளிரவு சிலர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் திடீரென பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது. இதில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், ஒரு பெண் படுகாயமடைந்தார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் போலீசார் உயிரிழந்த 2 நபர்கள் தான் தாங்கள் மறைத்து வைத்திருந்த கையெறி குண்டை தவறுதலாக வெடிக்கச்செய்திருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர்.