செய்திகள்
மெக்சிகோவில் பயங்கரம்: மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி
மெக்சிகோ நாட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டில் போதைபொருள் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. போதை பொருள் கடத்தல்களில் பல்வேறு குழுக்கள் ஈடுபடுவதால் அவ்வப்போது அந்த குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் கியூரெரோ மாகாணத்தில் ஐகுலா பகுதியில் ஆயுதம் ஏந்திய குழு ஒன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்தது. அவர்களை குறிவைத்த மர்ம நபர்கள் சிலர் அந்த வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த கோரத் தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட ஆயுதம் ஏந்திய குழுவினர் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்திய நபர்கள் உடனடியாக அந்த பகுதியை விட்டு தப்பிச்சென்று விட்டதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டில் கடந்த திங்கட்கிழமை போலீஸ் வாகனங்களை குறிவைத்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 14 போலீசார் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.