செய்திகள்
சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் ஆயுதப்படையில் பெண்கள் சேரலாம்

Published On 2019-10-10 18:31 GMT   |   Update On 2019-10-10 18:31 GMT
பெண்கள், ஆண்களின் துணையின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பெண்கள் ஆயுத படையில் சேரலாம் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
ரியாத்:

அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. ஆனால் அந்நாட்டின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பு ஏற்றது முதல் பெண்களுக்கு உரிமைகள் வழங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கும், விளையாட்டு மைதானம் மற்றும் தியேட்டருக்கு செல்வதற்கும் இருந்த தடைகள் கடந்த ஆண்டு விலக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்களின் துணையின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பெண்கள் ஆயுத படையில் சேரலாம் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான மற்றொரு படி. இதன் மூலம் பெண்கள் “சார்ஜெண்ட்” ஆக பணியாற்ற முடியும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்கள் முன்னேற்றத்துக்காக தொடர் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது சர்வதேச அளவில் பாராட்டை பெற்று வருகிறது.
Tags:    

Similar News