செய்திகள்
ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா. சபையில் பிரச்சினை எழுப்பினால் நடப்பதே வேறு- வடகொரியா எச்சரிக்கை
உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐநா சபையில் விவாதிக்க முயன்றால் அமைதியாக இருக்கமாட்டோம் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நியூயார்க்:
சமீப காலமாக வடகொரியா சிறிய ரக மற்றும் இடைநிலைத்தூர ஏவுகணைகளை சோதனை செய்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஐ.நா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கடந்த வாரம் வடகொரியாவால் கடலுக்குள் ஏவப்பட்ட ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வடகொரியாவை அழைத்தன.
இது குறித்து வடகொரியா தூதரக அதிகாரி கூறுகையில், இந்த விவகாரத்தில் மூன்று ஐரோப்பிய நாடுகளும் பொறுமை காக்க வேண்டும், மேலும் எங்களது தற்காப்பு நடவடிக்கைகளை ஒரு விவகாரமாக முன்னெடுத்தால், வடகொரியா அரசு அமைதியாக இருக்காது என்றார்.
ஐ.நா.வுக்கான வட கொரியாவின் தூதர் கிம் சாங் கூறும்போது, ‘இந்த பிரச்சினையை எழுப்புவது, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் எங்களது குறிக்கோளை மேலும் துரிதபடுத்தும்" என்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு அணுசக்தி சோதனை மற்றும் நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்தியதை அடுத்து ஐரோப்பிய நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. 2006 ஆம் ஆண்டு முதல் இதுவரை வடகொரியா 6 அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.