செய்திகள்
காந்தியடிகளை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்

காந்தியடிகளை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்

Published On 2019-10-04 02:19 GMT   |   Update On 2019-10-04 02:19 GMT
காந்தியடிகளை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
வாஷிங்டன் :

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ந்தேதி சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் உலகம் முழுவதும் அகிம்சை தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி காந்தியடிகளின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் செனட் சபையில் உறுப்பினர்கள் டெட் குரூஸ், ராபர்ட் மெனன்டெஸ் ஆகியோர் இந்த தீர்மானத்தை அறிமுகம் செய்தனர்.

அதில், ‘இங்கிலாந்திடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்காக ஆண்டுக்கணக்கில் காந்தியடிகள் நடத்திய விடுதலை போராட்டத்தை இந்த தீர்மானம் அங்கீகரிக்கிறது. அரசியல் மாற்றத்துக்காக அவர் மேற்கொண்ட முன்னோடி அகிம்சை போராட்டங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களின் விடுதலைக்கு உதவியதுடன், உலகம் முழுவதிலும் மார்ட்டின் லூதர் கிங் போன்ற ஏராளமானோருக்கு உத்வேகமாகவும் அமைந்திருக்கிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும், ‘சர்வதேச அகிம்சை தினத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இந்த தீர்மானம் ஆதரவு அளிப்பதுடன், அனைத்து அமெரிக்கர்களும் இதை கடைப்பிடிக்கவும் தீர்மானம் அழைப்பு விடுக்கிறது’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து டெட் குரூஸ் பேசும்போது, ‘அதிருப்தியை அமைதியாக வெளிப்படுத்தும் காந்தியின் நிகரில்லா அர்ப்பணிப்பு, இந்தியர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் எண்ணற்றவர்களுக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. அவரது வாழ்வு, தியாகம், மரபு போன்றவை உலகுக்கு ஒளியாக தொடர்கிறது. கொடுங்கோன்மை மற்றும் அநீதியை ஏற்படுத்தும் சர்வாதிகாரிகளுக்கு எச்சரிக்கையை அளிக்கிறது. அவரை தொடர்ந்து கவுரவிப்பதுடன், விடுதலை நாடுவோருக்கும் ஆதரவு அளிப்போம்’ என்று தெரிவித்தார்.



இதைப்போல ராபர்ட் மெனன்டெஸ் கூறும்போது, ‘காந்தியை கவுரவிக்கும் இந்த தீர்மானத்துக்கு தலைமை தாங்குவதில் பெருமை அடைகிறேன். அவரது நினைவு உலகெங்கிலும் மதிப்புடன் போற்றப்படுகிறது. இந்திய மக்களின் விடுதலைக்கு மிகப்பெரும் உத்வேகமாக அவர் இருந்தார்’ என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ‘பெண்களுக்கு சம உரிமை, சிறுபான்மையினருக்கு சம உரிமை, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சம உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என மனித உரிமைக்காக பாடுபட்ட காந்தியடிகளின் முக்கியத்துவம் வாய்ந்த 150-வது பிறந்தநாளை கொண்டாடும் நாம், அவரது போதனைகளை வாழ்வாக்குவதை நமக்குள்ளே உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

இதைப்போல பிரதிநிதிகள் சபையிலும் காந்தியடிகளை கவுரவிக்கும் தீர்மானத்தை பெண் உறுப்பினர் கிரேஸ் மெங் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘காந்தியடிகள் ஒரு புகழ்பெற்ற சமூக உரிமை ஆர்வலராகவும், சிறந்த ஆன்மிக தலைவராகவும் இருந்தார். அமைதியான போராட்டங்கள் மூலம் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டினார். உலகிற்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையிலான இந்த தீர்மானம் மூலம் அவரை நாம் பெருமைப்படுத்துவோம்’ என்று தெரிவித்தார்.

காந்தியடிகளின் பெருமையை போற்றும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு உள்ள தீர்மானத்துக்கு எம்.பி.க்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக பல எம்.பி.க்களும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். 
Tags:    

Similar News