செய்திகள்
ஹாங்காங்கில் ஏற்பட்ட கலவரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிவதையும், கரும்புகை சூழ்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.

சீன தேசிய தினத்தில் ஹாங்காங்கில் பெரும் வன்முறை

Published On 2019-10-02 01:06 GMT   |   Update On 2019-10-02 01:06 GMT
சீனாவின் 70-வது ஆண்டு தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் பெரும் வன்முறை வெடித்தது.
பீஜிங்:

சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்டு புரட்சியின் முடிவில் “சீன மக் கள் குடியரசு” தோற்றுவிக்கப்பட்டதன் 70-ம் ஆண்டு விழா, அதாவது சீனாவின் தேசிய தினம் நேற்று அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சீன தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வந்தாலும், இது 70-வது என்பதால் மிகவும் பிரமாண்டமான விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு பெருமளவு கொண்டாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டன.

அதன்படி தலைநகர் பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் தேசிய தின கொண்டாட்டங்கள் விமரிசையாக நடந்தன. இதனை நேரில் காண, சுமார் ஒரு லட்சம் மக்கள் சீனக்கொடிகளுடன் திரண்டிருந்தனர். விழாவில் சீன புரட்சியின் போது, உயிர் நீத்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த நிலையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கிலும் சீன தேசிய தினம் கொண்டாடப்பட்டது. ஹாங்காங்கை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் சீன தேசிய தினத்தின் போது சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் ஹாங்காங்கில் ஏற்கனவே கடந்த 4 மாதங்களாக சீனாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சீன தேசிய தினத்தை துக்க நாளாக கடைபிடித்து எதிர்ப்பு பேரணியை நடத்த ஜனநாயக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க ஹாங்காங் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன.

எனினும் திட்டமிட்டப்படி ஹாங்காங்கின் மத்திய நகரம் மற்றும் 6 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடைகளை அணிந்து, வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஒருசில இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி சுட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர். மேலும் அவர்கள் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து போலீசார் தடுப்புகளுக்கு தீவைத்தனர்.

இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர் ஒருவரின் நெஞ்சில் துப்பாக்கி குண்டு துளைத்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இது குறித்த தகவல் ஹாங்காங் முழுவதும் பரவியதையடுத்து, போராட்டக்காரர்கள் போலீசாருக்கு எதிராக பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

போலீசார் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசி எறிந்த போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீவைத்தனர். இதனால் ஹாங்காங் முழுவதும் கலவர பூமியாக காட்சி அளித்தது. போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையிலான வன்முறை சம்பவங்களில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இதற்கிடையே சீன தேசிய தினத்தையொட்டி மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டின் அதிபர் ஜின்பிங், “ஹாங்காங்கில் ஒரு நாடு இரு அமைப்பு தொடரும்” என கூறினார். இது பற்றி அவர் பேசுகையில், “இந்த மாபெரும் தேசத்தின் அஸ்திவாரத்தை அசைக்கக்கூடிய எந்த சக்தியும் இல்லை. எந்தவொரு சக்தியும் சீன மக்களையும், சீன தேசத்தையும் முன்னேறுவதைத் தடுக்க முடியாது. ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கோட்பாட்டை சீனா கடைப்பிடித்து, ஹாங்காங் மற்றும் மகாவ்வின் நீண்டகால செழுமை மற்றும் அமைதியை நிலைநிறுத்தி நிலையான வளர்ச்சியை அடையும்” என கூறினார்.
Tags:    

Similar News