செய்திகள்
இந்தியா படையெடுத்து காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டது- மலேசியா பிரதமர் குற்றச்சாட்டு
காஷ்மீரை இந்தியா படையெடுத்து ஆக்கிரமித்துக் கொண்டதாக ஐ.நா. சபையில் மலேசியா பிரதமர் மகதிர் முகமது குற்றச்சாட்டினார்.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் மலேசியா பிரதமர் மகதிர் முகமது கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) உரையாற்றினார்.
தனது உரையின் போது பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசிய மலேசியா பிரதமர், காஷ்மீர் நிலவரம் குறித்தும் ஐ.நா. சபையில் தனது கருத்தை தெரிவித்தார்.
காஷ்மீர் குறித்து அவர் கூறியதாவது:-
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் தீர்மானம் மற்றும் விதிகளுக்கு மதிப்பளிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக காஷ்மீர் பகுதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்ய சில காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் இந்தியாவின் இந்த நடவடிக்கை மிகவும் தவறான ஒன்று. பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுகாண இந்தியா முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.