செய்திகள்
குவான்டீல் பலூச் - முஹம்மது வாசிம்

பாகிஸ்தான் நடிகை கொலை வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை

Published On 2019-09-27 08:45 GMT   |   Update On 2019-09-27 08:45 GMT
சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வந்த பாகிஸ்தான் கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச் கொலை வழக்கில் அவரது சகோதரருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டு மாடல் அழகியும் டிவி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கினார்.

பவுசியா அசிம் என்னும் இயற்பெயரை கொண்ட இவர், ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று முன்னர் திட்டி இருந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டில் குவான்டீல் பலூச் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தார்.

டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் பாகிஸ்தான் 2 முறை மோதுகிறது. இதில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக அந்த வீடியோ செய்தியில் அவர் கூறியிருந்தார்.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடிக்கு சிறப்பு சலுகை ஒன்றையும் அறிவித்தார். போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அவர் என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன் என அந்த வீடியோவில் குவான்டீல் பலூச் அறிவித்திருந்தார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிவாகை சூடியது. இந்தியாவின் இந்த அபார வெற்றி, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எத்தகைய வெறியை ஏற்படுத்தியுள்ளது? என்பதை விளக்கும் விதமாக சர்ச்சை நடிகை குவான்டீல் பலூச்  ஒரு வீடியோவை வெளியிட்டார்.



பாகிஸ்தான் வெற்றிபெற முடியாமல் போனது பற்றியும், தனக்கு நிர்வாணமாக நடனம் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது குறித்தும் தனது வயிற்றெரிச்சலை ஆற்றும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை அந்த வீடியோவில் திட்டித் தீர்த்திருந்தார்.

இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு பேர்போன குவான்டீல் பலூச்(26) பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட முல்தான் நகரில் உள்ள வீட்டில் 15-7-2016 அன்று பிணமாக கிடந்தார்.



சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு குடும்ப கவுரவத்தை சீர்குலைத்ததால் கழுத்தை நெறித்து, அவரை கொன்று விட்டதாக குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

முல்தான் கோர்ட்டில் நடைபெற்றுவந்த இந்த கொலை வழக்கில் 35 சாட்சிகளிடம் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிமுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி இம்ரான் ஷபி, இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த குவான்டீல் பலூச்சின் மற்றொரு சகோதரர் மற்றும் சிலரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News