செய்திகள்
இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கம் - 20 பேர் பரிதாப பலி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் நிலநடுக்கத்தால் சாலைகள், கட்டிடங்கள் சேதமடைந்தன.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சீரம் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி இருந்தது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
அதன்பின், காலை 6.46 மணியளவில் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது என வானிலை மற்றும் புவிசார் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
அம்பான் தீவின் வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதை தொடர்ந்து மீண்டும் காலை 7.39 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 50 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலைகள் மற்றும் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என பேரிடர் மேலாண்மை நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.