செய்திகள்
பிரான்ஸ் நாட்டில் உள்ள லுப்ரிசால் தொழிற்சாலையில் தீ விபத்து

பிரான்சில் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

Published On 2019-09-26 09:54 GMT   |   Update On 2019-09-26 09:54 GMT
பிரான்ஸ் நாட்டில் உள்ள லுப்ரிசால் ரசாயன உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பாரிஸ்:

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நாடுகளில் இயங்கி வருவது லுப்ரிசால் ரசாயன தொழிற்சாலை. இந்த லுப்ரிசால் தொழிற்சாலையின் ஒரு பிரிவு பிரான்ஸ் நாட்டின் ரூயென் நகரில் இயங்கி வருகிறது. அபாயகரமான ரசாயன பொருட்கள் தயாரிப்பதால் இது அரசு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று நள்ளிரவு 2.40 மணியளவில் லுப்ரிசால் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க 200 தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர். தீ விபத்தினால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றி எந்த தகவல்களும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. 

ரூயன் நகரைச் சுற்றி உள்ள 11 நகரங்களில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படவில்லை.

தீ விபத்தினால் பெரும் ஆபத்து ஏதும் இல்லை, என்று உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் காஸ்டனர் ஆர்.டி.எல் வானொலியில் தெரிவித்தார். ஆனால் ஒரு கடுமையான ரசாயன வாசனை அந்த இடத்தை சூழ்ந்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News