செய்திகள்
பாகிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
பாகிஸ்தான் நாட்டில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 452 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டில் நேற்று மாலை 4 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவான நிலநடுக்கத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான மீர்பூர், கைபர், பக்துவா மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வசித்து வந்த வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் என பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. சாலைகள் இரண்டாகப் பிளந்து அதில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து நொறுங்கின. இதில் நேற்று வரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்பட பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 452-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நபர்களில் 100-க்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதால் பலி ந்ண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் என பல்வேறு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.