செய்திகள்
மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருதை வழங்கும் பில் கேட்ஸ்

குளோபல் கோல்கீப்பர் விருது பெற்றார் மோடி- பில் கேட்ஸ் வழங்கினார்

Published On 2019-09-25 03:33 GMT   |   Update On 2019-09-25 03:33 GMT
தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இந்திய பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருதை பில்கேட்ஸ் வழங்கி கவுரவித்தார்.
நியூயார்க்:

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பிறந்த  நாளான 2-10-2014 அன்று இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வீடுகளில்  கழிப்பறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டது இந்தத் திட்டம்.

இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 98 சதவீத கிராமங்களில் கிராமப்புற சுகாதார பாதுகாப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் மோடிக்கு சர்வதேச சாதனையாளர் விருதான உலக கோல்கீப்பர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு இன்று குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது. நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தின் இடையே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக பணக்காரரான பில் கேட்ஸ் இந்த விருதை மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

விருது பெற்ற பிரதமர் மோடி பேசுகையில், மகாத்மா காந்தியின் தூய்மை கனவு இப்போது நிறைவேறியிருப்பதாக கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்றியதுடன், அதனை தங்களது அன்றாட வாழ்வின் ஒருபகுதியாக மாற்றிய கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

தூய்மை இந்தியா திட்டத்தினால், 3 லட்சம் மக்கள் பல்வேறு நோய்களில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர், என உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதை மோடி சுட்டிக் காட்டினார்.
Tags:    

Similar News