செய்திகள்
ஏமனில் கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 16 பேர் பலி
ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.
சனா:
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் கிளர்ச்சியாளர்கள் நடத்திவரும் மோதலில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஏமன் அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில், ஏமனில் தெற்கு பகுதியில் உள்ள டலிஹ் மாகாணத்தில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் இரட்டை வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்தனர்.
பொதுமக்கள் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.