செய்திகள்
மகப்பேறு மருத்துவமனை தீ விபத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி - அல்கேரியாவில் சோகம்
அல்கேரியா நாட்டில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பச்சிளம் குழந்தைகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்ஜீயர்ஸ்:
அல்கேரியா நாட்டின் அல்ஜீயர்ஸ் நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென தீ பற்றியது. தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது.
தகவலறிந்து 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்றன. அவை போராடி தீயை அணைத்தன.
இந்த விபத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகியும், மூச்சுத்திணறியும் உயிரிழந்தன என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விபத்தில் சிக்கிய 11 குழந்தைகள், 100-க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 28 மருத்துவமனை ஊழியர்கள் உள்பட பலரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த பிரதமர் மற்றும் சுகாதார துறை மந்திரி ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 குழந்தைகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.