செய்திகள்
கொலம்பியாவில் விமான விபத்து : 7 பேர் பலி
கொலம்பியா நாட்டில் சிறிய ரக விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களுக்குள் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
போகோட்டா:
கொலம்பியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பொபையன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 9 பயணிகளுடன் ஒரு சிறிய ரக விமானம் லொப்ஸ் நகருக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விமானம் விழுந்த வீட்டில் இருந்த சிறுவன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.