செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

சீன பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு ஒத்திவைப்பு - டிரம்ப் அறிவிப்பு

Published On 2019-09-12 22:15 GMT   |   Update On 2019-09-12 22:15 GMT
சீன பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை நல்லெண்ண நடவடிக்கையாக 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பீஜிங்:

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போரால் இரு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு போட்டி போட்டு வரிகளை விதித்து வருகின்றன.

அந்த வகையில், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக வரி உயர்த்தப்படும் என்றும், அது அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக இந்த கூடுதல் வரி விதிப்பு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சீனாவில் 70-வது தேசிய தினம் அக்டோபர் 1-ந்தேதி கொண்டாட இருப்பதால், கூடுதல் வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று சீனாவின் துணை பிரதமர் லியு ஹி, என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கைக்கு ஏற்ப 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடைய சீன பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு அக்டோபர் 1-ந்தேதிக்கு பதில் அக்டோபர் 15-ந்தேதி முதல் அமலுக்கு வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக சீனா நேற்று முன்தினம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News