செய்திகள்
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் காட்சி

வியட்நாமில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி

Published On 2019-09-12 14:16 GMT   |   Update On 2019-09-12 14:16 GMT
வியட்நாமில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹனோய்:.

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தாய்நூயான், டுயான் குயங் உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர், 75 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கி ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வியட்நாமில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான கால இடைவெளியில் மட்டும் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News