செய்திகள்
ஸ்பெல்லிங்கை கற்றுக் கொண்டு பிறகு பேசுங்கள்.. -பாக். மந்திரிக்கு இந்திய நெட்டிசன்கள் பதிலடி
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான சிக்னல் துண்டிக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி பகத் உசைன் கேலியாக பதிவிட்டதற்கு இந்திய நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
நிலவை ஆராயும் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக பெங்களூரு இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அறிவித்தார். இருந்தபோதும் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியையும், இஸ்ரோ தலைவர் சிவனையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டினர். உலக தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி பகத் உசைன் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளின் தோல்வியையும், பிரதமர் மோடியையும் கேலியாக பேசி, ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார்.
இந்த உசைன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விண்கலம் குறித்து பேசுகையில் அரசியல்வாதியை போல அல்லாமல், ஏதோ விண்வெளி வீரரை போல மோடி பேசுகிறார். ஏழை நாட்டின் ரூ. 900 கோடியை வீணாக்கியது குறித்து மக்களவை அவரிடம் கேள்வி எழுப்ப வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து இந்திய நெட்டிசன்கள் பலர் உசைனை விமர்சித்துப் பதிவிட்டனர். அதில் ஒருவர், சேட்டிலைட் என்பதற்கு முதலில் ஸ்பெல்லிங்கை கற்றுக் கொண்டு பிறகு பேசுங்கள் என கமெண்ட் அடித்துள்ளார். உசைன் இட்ட பதிவில் satellite என்பது Sattelite என போடப்பட்டிருந்தது.
இதையடுத்து #WorthlessPakistan எனும் ஹேஷ்டாக்கினை இந்திய நெட்டிசன்கள் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.