செய்திகள்
காஷ்மீர் எல்லைப் பகுதியில் இம்ரான்கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி திடீர் ஆய்வு
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா காஷ்மீர் எல்லை பகுதியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தில் பணியாற்றி போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ம் தேதி மாவீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் போரில் உயிரிழந்த அந்நாட்டு ராணுவ வீரர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து இந்திய காஷ்மீர் எல்லை பகுதியை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இம்ரான்கான் உடன் அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவதும் உடன் இருந்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ராணுவ தளபதியுடன் காஷ்மீர் எல்லையை ஆய்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.