செய்திகள்
ஆப்கானிஸ்தான் ராணுவம் - தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 16 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்ஹார் மாகாணத்தில் அரசுப் படைகளுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இந்த படைகளுக்கு ஆதரவாக அரசுக்கு விசுவாசமான தன்னார்வலர்கள் படையும் இணைந்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் தக்ஹார் மாகாணத்துக்குட்பட்ட தர்காட் மாவட்டத்தில் நேற்று அரசுப் படைகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் இருவர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். அரசுப் படைகளின் எதிர் தாக்குதலில் 8 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.