செய்திகள்
மகாத்மா காந்தி

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள்: சிறப்பு தபால் தலை வெளியிடும் ரஷ்யா

Published On 2019-09-05 06:00 GMT   |   Update On 2019-09-05 06:03 GMT
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவாக சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
விளாதிவோஸ்டோக்:

ரஷ்யாவின் விளாதிவோஸ்டோக் நகரில் கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இது நாளை வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்திய பிரதமர் மோடியை அழைத்தார். இந்த அழைப்பை ஏற்று மோடி ரஷ்யா சென்றார்.

இந்த சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு, சுரங்கம், அணு சக்தி, பாதுகாப்பு, விமானம், கடல்சார் தொடர்பு, போக்குவரத்து கட்டமைப்பு, உயர் தொழில்நுட்பம், மக்களுக்கு இடையிலான தொடர்பு ஆகியவற்றில் ரஷ்யா - இந்தியா ஆகிய இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.



இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு பின்னர், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் வெங்கடேஷ் ஷர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.

இதில் அவர் கூறுகையில், ‘மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனை தனது செய்தியாளர் சந்திப்பிலும் அதிபர் புதின் கூறியுள்ளார்.

இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று அவரை கவுரவப்படுத்தும் ரஷ்யாவுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறியுள்ளார்.
Tags:    

Similar News