செய்திகள்
மாதிரிப் படம்

ஈராக்கில் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் - 9 பயங்கரவாதிகள் பலி

Published On 2019-09-04 09:33 GMT   |   Update On 2019-09-04 09:33 GMT
ஈராக் நாட்டில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 9 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்:
 
ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது நினிவே மாகாணம். இங்குள்ள மொசூல் நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள அல் சகாஜி  பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அல் சகாஜி பகுதிக்கு சென்ற ஈராக் ராணுவம், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த ஒரு சுரங்கத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுரங்கம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அதில் இருந்த 9 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

ஈராக் பாதுகாப்புப் படைகள் 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாடு முழுவதும் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளை முழுமையாக தோற்கடித்த பின்னர் ஈராக்கின் பாதுகாப்பு நிலை வியத்தகு முறையில் முன்னேறியுள்ளது.

ஆயினும், ஐஎஸ் பயங்கரவாதிகள் பாலைவனங்கள் மற்றும் கரடுமுரடான பகுதிகளை பாதுகாப்பான புகலிடங்களாக கொண்டு, பாதுகாப்புப் படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தொடர்ந்து கொரில்லா போர்முறையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News