செய்திகள்
அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பர்

ஈரானுடன் சண்டையை விரும்பவில்லை சமாதானத்தையே விரும்புகிறோம் -அமெரிக்கா

Published On 2019-08-29 08:25 GMT   |   Update On 2019-08-29 09:37 GMT
ஈரானுடனான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அமெரிக்கா விரும்புகிறது, ராணுவ மோதலை விரும்பவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புத்தறை மந்திரி மார்க் எஸ்பர் தெரிவித்தார்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரான்சில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில்  செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், சரியான சூழ்நிலைகள் அமையும்போது ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானியை  சந்திக்க உள்ளதாக கூறினார். 

முன்னதாக ட்ரம்புடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசும்போது, டிரம்பிற்கும் ரூஹானிக்கும் இடையில் ஒரு சந்திப்பு சில வாரங்களுக்குள் நடைபெற விரும்புவதாகக் கூறினார்.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பர் ராணுவ தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘ஈரானுடனான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அமெரிக்கா விரும்புகிறது, ராணுவ மோதலை விரும்பவில்லை. பிரச்சினையை தீர்க்க உதவும் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானின் தலைமை ஒப்புக் கொள்ளும் என்று நம்புகிறேன்’, என தெரிவித்தார்.

கடந்த  ஆண்டில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதிலிருந்து அமெரிக்க-ஈரான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதுடன், அந்த நாட்டின் பொருளாதாரம் சார்ந்த அனைத்து முக்கிய துறைகளுக்கும் எதிராக மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் டேங்கர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து சமீபத்திய மாதங்களில் நிலைமை மோசமடைந்தது. இதற்காக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானைக் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News