செய்திகள்
அமெரிக்காவில் சீக்கியர் கத்தியால் குத்திக்கொலை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியாவை சேர்ந்த சீக்கிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாசிங்டன்:
இந்தியாவை சேர்ந்த பரம்ஜித் சிங் என்ற சீக்கியர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ட்ரேசி நகரில் வசித்து வந்தார். இவர் கடந்த ஞாயிறன்று இரவு 9 மணியளவில் அருகிலுள்ள பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர் ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘சம்பவம் நடந்த அதே நேரத்தில் பூங்காவின் வேலியை தாண்டி ஒரு நபர் குதித்தது வீடியோவில் பதிவாகியுள்ளது. கொலையாளியை தேடும் பணி தீவீரமாக நடைபெற்று வருகிறது. கொலை செய்தவர் யார்? அவரது நோக்கம் என்ன? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.
பரம்ஜித்தின் உறவினர் ஹர்னேக் சிங் கூறுகையில், “இந்த நாட்டில் இருப்பதை நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம், ஆனால் தற்போது நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்” என்றார்.
அங்கு உள்ள சீக்கிய அமைப்பு பரம்ஜித் சிங் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் கொலையாளி பற்றி துப்பு கொடுப்பவருக்கு 1000 டாலர்கள் சன்மானம் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிராக இது போன்ற தாக்குதல் சம்பங்கள் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.