செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

அணு குண்டு வீசி சூறாவளியை தடுக்க முடியுமா? - டிரம்ப் கேள்வி

Published On 2019-08-27 01:34 GMT   |   Update On 2019-08-27 01:34 GMT
அமெரிக்காவை தாக்க வரும் சூறாவளிகளை அணுகுண்டுகளை பயன்படுத்தி தடுக்க முடியமா? என ஜனாதிபதி டிரம்ப் கேட்டதாக அந்நாட்டின் பிரபல இணையதள ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர நகரங்கள் சூறாவளித் தாக்குதல்களுக்கு உள்ளாகும் பகுதிகளாக இருக்கின்றன. சூறாவளிகள் கரையைக் கடக்கும்போது உயிர்ச்சேதங்களும், பெரும் பொருட்சேதங்களும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவை தாக்க வரும் சூறாவளிகளை அணுகுண்டுகளை பயன்படுத்தி தடுக்க முடியமா? என ஜனாதிபதி டிரம்ப் கேட்டதாக அந்நாட்டின் பிரபல இணையதள ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

அந்த செய்தியில், “ஆப்பிரிக்க கடலோரப் பகுதியில் உருவாகும் சூறாவளிகள், அட்லாண்டிக் கடல் மீது நகர்ந்து வரும்போது, சூறாவளியின் கண் என குறிப்பிடப்படும் மையப் பகுதியில் அணு குண்டுவீசி அதை தடுக்க முடியுமா? என தேசிய பாதுகாப்பு அதிகாரிகளிடம் டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கேட்டதாக சொல்லப்படுகிறது” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் டிரம்ப் கூறியது மோசமான யோசனை அல்ல என வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், டிரம்பின் கருத்து புதியது அல்ல என்றும், 1950-களில் எய்சன்ஹோவர் அதிபராக இருந்தபோது, இதே கருத்து முன்வைக்கப்பட்டதாகவும், பின்னர் விஞ்ஞானிகள் அது சாத்தியமில்லை என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அணு வெடிப்பு சூறாவளியின் பாதையை மாற்றாது, அதே சமயம் அதனால் ஏற்படும் கதிரியக்க வீழ்ச்சி சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறுகிறது. 
Tags:    

Similar News