செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்

“அரண்மனை புல்வெளியை டிரம்ப் பாழாக்கிவிட்டார்” - இங்கிலாந்து ராணி நகைச்சுவையாக புகார்

Published On 2019-08-26 01:02 GMT   |   Update On 2019-08-26 01:02 GMT
பக்கிங்ஹாம் அரண்மனையின் முன் உள்ள புல்வெளியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாழாக்கிவிட்டதாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நகைச்சுவையாக புகார் கூறி இருக்கிறார்.
லண்டன்:

இங்கிலாந்தை பொறுத்தவரையில் இயற்கை தோட்டத்தின் அத்தியாவசிய உறுப்பாக புல்வெளி விளங்குகிறது. புல்வெளிகளை நிர்வகிக்கும் நீண்டகால பாரம்பரியத்தை அந்நாடு கொண்டுள்ளது.

இந்த நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனையின் முன் உள்ள புல்வெளியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாழாக்கிவிட்டதாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நகைச்சுவையாக புகார் கூறி இருக்கிறார்.



டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு அரசு முறை பயணமாக சென்றார். அப்போது டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் வந்த ஹெலிகாப்டர்கள் ஒரே நாளில் 2 முறை பக்கிங்ஹாம் அரண்மனை அருகே தரையிறங்கின. இது அரண்மனையின் முன் உள்ள புல்வெளியில் ஆழமான தடங்களை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில், டிரம்பின் பயணத்துக்கு பிறகு இங்கிலாந்து வந்த ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரீசனிடம் ராணி இரண்டாம் எலிசபெத் “வந்து என் புல்வெளியைப் பாருங்கள், அது பாழாகிவிட்டது. டிரம்ப் தான் காரணம்” என நகைச்சுவையாக கூறினார்.

ஸ்காட் மாரீசனுக்கு நெருக்கமான ஒருவர் இந்த தகவலை தற்போது வெளியிட்டு உள்ளார். முன்னதாக டிரம்பின் வருகைக்கு இங்கிலாந்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதும், ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டதும் நினைவு கூரத்தக்கது. 
Tags:    

Similar News