செய்திகள்
அமேசானில் பரவி வரும் காட்டுத்தீயால் பாதிப்படைந்த ஒரு பகுதி

அமேசானில் பரவி வரும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி - ஜி7 நாடுகள் உறுதி

Published On 2019-08-25 18:33 GMT   |   Update On 2019-08-25 18:33 GMT
அமேசான் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்துள்ளன.
பியாரிட்ஸ்:

உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த காட்டுத்தீயால் உலக நாடுகள் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட வேறு 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு கொலம்பியா அரசு நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்துள்ளன. இது குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறுகையில், ‘அமேசான் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கூடிய விரைவில் உதவுவதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அந்த நாடுகளுடன் எங்கள் குழு தொடர்பு கொண்டு வருகிறது. இதன் மூலம் தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்குவது தொடர்பான உறுதியான முடிவுகள் எடுக்க முடியும்’ என்று தெரிவித்தார்.

பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 மாநாடு நடந்து வரும் நிலையில், அதில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News